கியவ்: கியவ் நகரில் மின்சார கட்டமைப்பு முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளதாக அந்நகர அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிட்டத்தட்ட நாட்டின் பாதி எரிசக்தி கட்டமைப்பு ரஷ்யத் தாக்குதலில் சேதமடைந்துவிட்டதாக உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷம்யல் சொன்னார்.
சென்ற பிப்ரவரி மாதம் உக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, கடந்த சில வாரங்களாக அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த வாரம் குறிப்பாக, மின்சார கட்டமைப்புமீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது ரஷ்யா.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான கியவ்வில் மின் தடையும் தண்ணீர் பற்றாக்குறையும் காணப்படுகிறது.
கியவ்வைச் சுற்றியுள்ள பல கிராமங்களும் நகரங்களும் இருளில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், மின் கட்டமைப்பு முற்றிலுமாக முடங்குவது உள்ளிட்ட பல்வேறு சூழல்களை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருவதாக கியவ் நகர நிர்வாகத் துணைத் தலைவர் மிக்கோலா சொன்னார்.
மின் கட்டமைப்பு முற்றிலுமாக முடங்கிவிட்டால் நகரத்தைவிட்டு வெளியேறுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார். அதேசமயம் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான முயற்சிகளும் அவற்றுக்கான சீரமைப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்.
ஏற்கெனவே கடுங்குளிர் நிலவும் உக்ரேனில் வரும் நாள்களில் கடுங்குளிர் வாட்டி எடுக்கும். அப்போது மின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தன் நாட்டின் எரிசக்தி கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை தீவிரவாத செயல் என்று உக்ரேன் கண்டித்துள்ளது. ஆனால், இந்த விமர்சனங்களை நிராகரித்த ரஷ்யா, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேன் உடன்படாததற்கான பதிலடி என்று கூறுகிறது.

