சீனாவில் கொவிட்-19 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் ஏறுமுகமாக உள்ளன. இந்நிலையில், ஆறு மாதங்களில் அங்கு முதல் தொற்று மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கைச் சேர்ந்த 87 வயதான ஆடவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மாண்டார். அவருக்கு தொற்று அறிகுறிகள் நவம்பர் 11ஆம் தேதி அன்று தோன்றின. இரண்டு நாள்கள் கழித்து அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சீனாவில் கடைசியாக மே 26ஆம் தேதி தொற்று மரணம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சீனாவில் சனிக்கிழமை நிலவரப்படி 23,238 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த மூவாண்டுகளாக சீனாவின் எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. அண்மையில்தான், கட்டுப்பாடுகளை அந்நாடு தளர்த்தி வருகிறது.
சீனாவில் முதியவர்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் குறைவாகவே உள்ளது. 80 வயதைத் கடந்த 66 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.


