மாராங் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார் பாஸ் கட்சித் தலைவர்

மாராங் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார் பாஸ் கட்சித் தலைவர்

2 mins read
3ab947a5-980c-4e00-9e94-02a0d0988efa
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஹாடி அவாங்கின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தமது மாராங் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார். இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் அவரது வெற்றிப் பயணம் தொடர்கிறது.

இம்முறை அவர் 39,095 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு சுமார் 11.15 மணியளவில் வெளியான இத்தகவல் ஹாடி அவாங் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

தமக்கு எதிராகக் களமிறங்கிய தேசிய முன்னணி வேட்பாளர் ஜஸ்மிரா ஓத்மானை ஹாடி வீழ்த்தினார். பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அசார் ஷுகோருக்கு வெறும் 3,816 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஜிடிஏ வேட்பாளர் ஸராவி சுலோங் 390 வாக்குகளுடன் படுதோல்வி கண்டார்.

அண்மைக்காலமாக மலேசிய அரசியல் களத்தில் பல்வேறு குழப்பங்கள் தலைதூக்கிய நிலையில், மூத்த தலைவர்களில் ஒருவரான ஹாடி அவாங்கும் சில விமர்சனங்களுக்கு ஆளானார்.

இதற்கிடையே, பெரிக்கத்தான் நேஷனல் தலைமையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க இயலும் என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பாஸ் கட்சியின் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 15ஆவது பொதுத்தேர்தல் தொடர்பாக வெளிவரும் அதிகாரபூர்வமற்ற தகவல்களைப் பார்க்கும்போது, பெரிக்கத்தான் ஆட்சி அமையும் என்ற நம்பிக்கைகயுடன் கூடிய எண்ணம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாஸ் கலந்தாலோசிக்கும் என்றார் ஹாடி அவாங்.

பாஸ் கட்சி மீதும் அதன் தோழமைக் கட்சிகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ள வாக்காளர்களுக்கு தாம நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், குறிப்பாக இளம் வாக்காளர்களுக்கும் பல்வேறு இனங்கள், பின்னணியைக் கொண்டுள்ள வாக்காளர்களுக்கும் நன்றி என்றார் அவர்.

பெரிக்கத்தான் நேசனல் அணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் ஹாடி கூறினார்.

பாஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுகுறித்து விரைவில் கலந்தாலோசிக்கப்படும் என்றார். கெடா, கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.