குவாந்தான்: பாகாங்கில் எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பில் குழப்பம் நிலவுகிறது.
பாகாங்கில் பெரிக்கத்தான் நேஷனல் 17 இடங்களையும் தேசிய முன்னணி 16 இடங்களையும் பக்கத்தான் ஹரப்பான் எட்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இவற்றில் இரண்டு கூட்டணிகள் இணைந்தால்தான் அங்கு ஆட்சி அமைக்க இயலும்.
பெரிக்கத்தான் நேஷனலின் தேசியத் தலைமை, பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியிருப்பதால் அது தேசிய முன்னணியுடன் கைகோத்து ஆட்சி அமைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்று தெளிவான தகவல் இல்லை.
பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மன் முதல்வர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தேசிய முன்னணியின் மாநிலத் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் கட்சியின் வெற்றிக்குச் சேவையாற்றிய தொண்டர்களுக்கும் ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்தப் பொதுத் தேர்தலில் பாகாங்கில் பெரிக்கத்தான் நேஷனலின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
செக்கா, கோலா சென்டுல், புலாவ் தவார், புக்கிட் இபாம், சுங்காய் லெம்பிங், புலாவ் மனிஸ், கோலா செமந்தான், லஞ்சாங், ஜெந்தெராக் ஆகிய இடங்களில் அது பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.
பெரிக்கத்தான் வேட்பாளர் யூனுஸ் ரம்லி காலமானதைத் தொடர்ந்து டியோமான் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்தல் முடிவு சாதகமாக அமைந்தால், தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனலுடன் சமநிலை காணும் வாய்ப்பு உள்ளது.
பாகாங்கிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பெரிக்கத்தானின் கை ஓங்கியுள்ளது. பெரும்புள்ளிகள் சிலரை இதன் வேட்பாளர்கள் வீழ்த்தியுள்ளனர்.
பெர்லிஸ் மாநில முதல்வர் இன்று பதவியேற்பு
இவ்வேளையில் பெர்லிஸ் மாநிலத்தின் புதிய முதல்வர் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பெர்லிசில் பெரிக்கத்தான் நேஷனல் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில் பெர்லிஸ் மாநிலக் கட்சித் தலைவர் முகமது ஷுக்ரி ரம்லி, புதிய முதல்வர் இன்று பதவியேற்கக்கூடும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
கட்சியின் தேசியத் தலைமையிடமிருந்து இதன் தொடர்பிலான நியமனக் கடிதத்திற்குக் காத்திருப்பதாக நேற்று அவர் கூறினார். கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் திரு ஷுக்ரி பேசினார்.
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் சங்லாங் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்ட அவர், தமக்கு மிகப்பெரும் வெற்றியை ஈட்டித்தந்த பெர்லிஸ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பெர்லிஸ் மாநில சட்டமன்றத்துக்கான 15 இடங்களில் 14ல் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி வாகை சூடியுள்ளது. அவற்றில் பெரும்பாலான இடங்கள் பாஸ் கட்சியின் வசம் வந்துள்ளன. தேசிய முன்னணி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது.

