கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில அம்னோ கட்சித் தலைவர் நோ ஒமார் (படம்) பதவி விலகியுள்ளார். கட்சியின் தேசியத் தலைவர் அகமது ஸாகிட் ஹமிடிக்கும் தமக்குமிடையே நம்பிக்கை குலைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கட்சித் தலைவர் ஸாகிட்தான் தம்மை இந்தப் பதவிக்கு நியமித்ததாகவும் ஆனால் அண்மைப் பொதுத்தேர்தலின்போது அவருக்குத் தம்மீது நம்பிக்கை இல்லை என்றும் திரு ஒமார் கூறினார்.
கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கத் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், வேட்பாளர் பட்டியலிலும் தமது பெயர் இடம்பெறவில்லை என்பதைச் சுட்டினார்.
"எனக்கு அதுகுறித்து வருத்தமில்லை. இருப்பினும் இவ்வளவு நாளாக அம்னோவின் சிலாங்கூர் பிரிவிற்கு எனது பங்களிப்பு எதுவுமே இல்லை என்பதுபோல அந்த நடவடிக்கை அமைந்திருந்தது," என்றார் திரு ஒமார்.
ஸஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ், கைரி ஜமாலுதீன் உள்ளிட்ட சிலர் புதிதாக சிலாங்கூர் மாநிலத் தொகுதிகளில் நிறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் அந்த இடங்களில் தோல்வியைத் தழுவினர் என்று திரு ஒமார் குறிப்பிட்டார்.
அம்னோ கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கட்சித் தலைவர் ஸாகிட் உண்மையிலேயே பெருந்தன்மையானவர் என்றால் அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்திய திரு ஒமார், நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ கட்சியின் அப்போதைய தலைவர் நஜிப் ரசாக் பதவி விலகியதைச் சுட்டினார்.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஓரங்கட்டப்பட்டதையடுத்து திரு ஸாகிட் பதவி விலகவேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.

