வாஷிங்டன்: அமெரிக்க, இந்திய உறவின் வரலாற்றில் 2022 மாபெரும் ஆண்டாக இருக்கும். அடுத்த ஆண்டு இதைவிட பெரியதாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் அண்மையில் முடிவடைந்த ஜி-20 உச்சநிலை மாநாட்டில் கருத்திணக்கம் ஏற்படுவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியதற்காக முதன்மை துணை தேசியப் பாதுகாப்பு ஆலோ சகரான ஜோன் ஃபைனர் பாராட்டி னார்.
அமெரிக்காவும் அதன் அதிபர் ஜோ பைடனும் சுமையைச் சுமக்க உதவும், உலகளாவிய நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல பங்காளிகளைத் தேடும்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை பல நூறு இந்திய அமெரிக்கர்கள் கூடிய கூட்டத்தில் அவர் பேசினார்.
"ஜி-20 உலக மாநாட்டில் அதனைக் கண்கூடாகப் பார்த்தோம். உலக நாடுகளின் கூட்டு அறிக்கைக்கு ஒருமித்த கருத்தை உருவாக்க பிரதமர் மோடி உதவியாக இருந்தார்.
"அணுவாயுதம் தொடர்பாக அதிகரித்துவரும் ஆபத்தையும் இந்திய அரசாங்கம் முன்னிலைப் படுத்தி சுட்டிக் காட்டியிருந்தது என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்தியப் பிரதமர் மோடியும் 15 முறைக்கு மேல் சந்தித்துப் பேசியுள்ளனர். அண்மையில் பாலித் தீவில் அவர்கள் கடைசியாகச் சந்தித்துப் பேசினர் என்று இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அளித்த மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில் ஜோன் ஃபைனர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியாவின் எதிர்காலம் முன்பைவிட பிரகாசமாக இருப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.
"இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. கடந்த காலங்களில் ஜனநாயகம், இறையாண்மைக்கான அதன் கடப்பாடு அசைக்க முடியாததாக இருக்கிறது. இதனால் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட வலிமையான தேசத்தைக் கட்டமைக்கும் பொறுப்பை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க உறவு செழித்தோங்கி வருகிறது. இந்திய மக்களை நமது நண்பர்களாக ஏற்றுக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்," என்று திரு ஜான் கார்ட்டர் கூறினார்.

