சாலமன் தீவுகளை இன்று செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவில் 7.0 என பதிவான அந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதோடு தலைநகர் ஹொனியாராவின் சில பகுதிகளில் சிறுது நேரம் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகள் தடைபட்டன.
எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவோ கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்குப் பெரிய சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
நில அதிர்வுகள் ஏறக்குறைய 20 வினாடிகள் நீடித்ததாக ஹொனியாராவில் உள்ள ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கூறினார்.
ஹொனியாராவின் பல பகுதிகளிலும் தங்கள் வீடுகளில் இருந்தும் வேலையிடங்களிலும் இருந்தும் வெளியேறிய மக்கள், சுனாமிக்கு அஞ்சி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
"இதுபோன்ற நிலநடுக்கத்தை முதன்முறையாக நான் உணர்ந்ததால் எனக்கு மிகவும் பயமாக இருந்தது," என்று பசிஃபிக் கசினோ ஹோட்டல் மேலாளர் ஒருவர் கூறினார்.
ஐக்கிய நாட்டுத் தரவின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரங்களில் ஏறத்தாழ 20,000 பேர் வசிக்கின்றனர்.

