கொலராடோ ஸ்பிரிங்ஸ்: அமெரிக்காவில் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். கொலராடோ ஸ்பிரிங்ஸ் எனும் இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக துப்பாக்கிக்காரன் கைது செய்யப்பட்டான்.
துப்பாக்கிக்காரனின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அவன் தலையிலும் முகத்திலும் தாக்கி அவனைச் செயலிழக்க வைத்த முன்னாள் ராணுவ அதிகாரி ரிச்சர்ட் ஃபியரோ, அந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார்.
ரிச்சர்ட் ஃபியரோ என்ற முன்னாள் ராணுவ அதிகாரி 'கிளப் கியூ' என்ற மனமகிழ் மன்றத்தில் தமது மனைவி, மகள், நண்பர்களுடன் நிகழ்ச்சி ஒன்றை ரசித்த வண்ணம் இருந்தார். அப்பொழுது திடீரென துப்பாக்கிக் குண்டு சத்தம் அமைதியைக் குலைத்தது.
நான்கு முறை ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் ராணுவ அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட அனுபவத்தால் சட்டென அதை எதிர்கொண்டு திருப்பித் தாக்க வேண்டும் என அவருக்கு தோன்றியது.
அவர் தமது அனுபவத்தை, வீட்டில் ஒருபக்கம் அவரது மனைவியும் மகளும் துப்பாக்கிச்சூடு காயங்களைத் தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில், நேர்காணலில் விவரித்தார் 45 வயது நிரம்பிய, 2013ஆம் ஆண்டு ராணுவத்தில் மேஜராகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற ரிச்சர்ட் ஃபியரோ.
"நான் என்ன செய்தேன் என எனக்கு சரியாக நினைவில்லை. நான் அப்படியே போர்க்கள நிலைக்குச் சென்றுவிட்டேன்," என்று தலையசைத்தபடி கூறிய ஃபியரோ, "அந்த நபர் நம்மைக் கொல்லும் முன் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது," என்று விளக்கினார். ஆண்டர்சன் லீ ஆல்டிரிச் என்ற 22 வயது துப்பாக்கிக்காரன், ஐந்து பேரைக் கொன்றது, 18 பேருக்கு காயம் விளைவித்த குற்றங்களுக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
மனமகிழ் மன்ற வாடிக்கையாளர்கள் இடைமறித்து துப்பாக்கிக்காரனை தடுத்திருக்காவிட்டால் மரண எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சம்பவம் குறித்த திரு ஃபியரோவின் விவரங்கள் காவல்துறையினர், நகர அதிகாரிகள், மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் தரும் தகவல்களுடன் ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
திரு ஃபியரோவின் புகைப்படத்தைப் பார்த்த மன்ற உரிமையாளர் நிக் கிர்ஸெக்கா துப்பாக்கிக்காரனை மடக்கிய நபர் இவர்தான் எனக் கூறினார்.
துப்பாக்கிச்சூடு ஆரம்பித்தவுடன் நண்பர் ஒருவரை இழுத்து தரையில் படுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். துப்பாக்கியைக் கொண்டு சரமாரியாக சுட்டவன் வாடிக்கையாளர்கள் பயத்தில் ஓடிய பகுதியை நோக்கி நகர்வதைக் கண்டதாக கூறினார். பதினைந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த திரு ஃபியரோ, இருந்த இடத்திலிருந்து வேகமாக ஓடி துப்பாக்கிக்காரனைப் பிடித்தார். அவனைத் தரையில் தள்ளி அவன் மேல் குதித்தார். "அவன் என்னை நோக்கிச் சுட்டானா, சுடுவதற்குத் தயார் ஆனானா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது," என்று கூறும் திரு ஃபியரோ, "அவனைக் கீழ்ப்படிய வைக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தேன்," என்று கூறும் ஃபியேரோ பின்னர் மற்ற மன்ற வாடிக்கையாளர்களையும் தமது துணைக்கு அழைத்து துப்பாக்கிக்காரனின் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அவனை செம்மையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

