ஹொனியாரா: சாலமன் தீவுகளில் நேற்று சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் ஆஸ்திரேலியத் தூதரகம், விமான நிலையம், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. அத்துடன் சாலமன் தீவுகளின் தலைநகரான ஹொனியாரா நகர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் கட்டடச் சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
முதல் நிலநடுக்கம் மாலாங்கோ பகுதியில் இருந்து தென்மேற்கே 16 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 15 கிமீ ஆழத்தில் 7 ரிக்டர் அளவில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. அரை மணி நேரம் கழித்து அதன் அருகே 6 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய தூதரகத்தின் கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் உயிர்ச்சேதம், காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்து தகவல் தெரியவில்லை.
அதேபோல் அங்குள்ள ஹொனியாரா அனைத்துலக விமான நிலையத்தின் கூரையும் சேதமடைந்ததாக விமான நிலைய ஊழியர் ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

