ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுப்பயணிகளுக்கு பாஸ்போர்ட்டில் சொந்தப் பெயருடன் குடும்பப் பெயர் அல்லது தந்தை பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஐக்கிய அரபு சிற்றரசுகள் இந்திய சுற்றுப்பயணிகளுக்கான அதன் விசா அனுமதி விதிமுறைகளை மாற்றியுள்ளதாக இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.
பாஸ்போர்ட்டில் ஒரு பெயர் மட்டும் இருப்பவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.
அதாவது சொந்தப் பெயரை மட்டும் அல்லது குடும்பப் பெயரை மட்டும் பாஸ்போர்ட்டில் வைத்திருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு அனுமதி இருக்காது.
அந்த விதிமுறைகள் கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடப்புக்கு வந்ததாக ஏர்இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, சுற்றுப்பயண விசா அனுமதி, வந்தவுடன் விமான நிலையத்தில் பெறும் விசா அனுமதி இரண்டுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது.
வேலை அனுமதி, நீண்டகாலம் தங்கும் அனுமதி பெற்றவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது.
ஆனால் இது இந்தியாவுக்கான தனிப்பட்ட விதிமுறையா அல்லது மற்றநாட்டவர்க்கும் இந்த விசா அனுமதி மாற்றங்கள் பொருந்துமா என்பது தெளிவாகவில்லை.
முன்னறிவிப்பு இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்களால் கடந்த இரண்டு நாள்களாக இந்தியச் சுற்றுப்பயணிகள் சிலர் அவதிக்கு உள்ளானதாகத் தகவல்கள் கூறின.

