பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக அசிம் முனிர் நியமனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தளபதியாக லெஃப்டினண்ட் ஜெனரல் அசிம் முனிர் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாகப் பதவி வகித்து இம்மாதம் ஓய்வுபெறும் ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவுக்குப் பதிலாக பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் தலைவராக இருந்த முனிர், பதவி ஏற்க இருக்கிறார்.
மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிய உக்ரேனிய நகரங்கள்
கியவ்: ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக உக்ரேன் தலைநகர் கியவ் உட்பட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இன்றி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். கடந்த ஒன்பது மாதங்களாக நடந்து வரும் போரில் இதுவே உக்ரேனுக்கு ஏற்பட்டுள்ள ஆக மோசமான பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பையும் தண்ணீர் விநியோகத்தையும் மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவர உக்ரேனிய அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 271 பேர் மாண்டனர். இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாள்கள் கழித்து, இடிபாடுகளுக்கு அடியிலிருந்து 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். மேலும் பலரைத் தேடும் பணி தொடர்கிறது.

