மலேசியாவின் புதிய பிரதமராக திரு அன்வார் இப்ராகிம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.52 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 0.9 விழுக்காடு அதிகரித்து 4.4565 என்ற அளவை எட்டியது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குப் பிறகு வலுவான நிலையை ரிங்கிட் எட்டியுள்ளது.
மலேசியப் பிரதமராக திரு அன்வார் நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டபோது ரிங்கிட்டின் மதிப்பு 1.8 விழுக்காடு எகிறியது. 2016 மார்ச் மாதத்துக்குப் பிறகு அதன் மதிப்பு ஒரே நாளில் இந்த அளவு ஏற்றம் கண்டிருப்பது அதுவே முதன்முறை.
இந்நிலையில், சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 0.6 விழுக்காடு அதிகரித்து 3.2515 என்ற அளவை எட்டியது. நேற்று வியாழக்கிழமை ரிங்கிட் 1.2 விழுக்காடு வலுவடைந்தது.

