தொற்றைக் கட்டுப்படுத்த
சீனாவில் கடும் கட்டுப்பாடுகள்
ஷாங்காய்: சீனாவில் கொவிட்-19 அன்றாடத் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனையடுத்து அங்கு தொற்றைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி இரண்டாவது நாளாக அன்றாடத் தொற்றுப் பதிவின் எண்ணிக்கை 32,695 என உச்சத்திற்குச் சென்றுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் பதிவான 29,654 உச்சத் தொற்றுப் பதிவு எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கை 31,144 ஆக பதிவானது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வர்த்தக நகரமான ஷாங்காயில் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலைப்பாம்புடன் போராடிய சிறுவன்
சிட்னி: நீச்சல் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயதுச் சிறுவனை மூன்று மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு கடித்து, அவன் உடம்பை இறுக்கியவாறு குளத்திற்குள் விழுந்தது. சிறுவனின் அலறல் கேட்டு அங்கிருந்த அவனது 76 வயது தாத்தா, நீச்சல் குளத்தில் குதித்து, பாம்பிடம் இருந்து சிறுவனைத் தூக்கி காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்தப் பாம்பு, சிறுவனை விடாமல் இறுகப் பற்றியிருந்தது. உடனே சிறுவனின் தந்தையும் குளத்திற்குள் குதித்து பாம்பின் பிடியைத் தளர்த்தி சிறுவனைக் காப்பாற்றினர். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் பைரோன் பே கடற்கரைப் பகுதியில் நடந்தது.

