தீ விபத்தின்போது தப்பிக்க முடியாமல் திணறிய மக்கள்
பெய்ஜிங்: சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் மாநிலத்தில், கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
சீனாவில் கடந்த மூன்று நாளாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஜின்ஜியாங் மாநிலத்தில் உள்ள 4 மில்லியன் பேர் வசிக்கும் உரும்கி நகரில் மக்கள் கடந்த 100 நாட்களாக வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர்.
அங்கு மட்டும் கடந்த இரண்டு நாள்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், அங்கு கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டுப்பாடுகள் காரணமாக அக்கட்டடத்தின் பல பகுதிகள் அடைக்கப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டபோது மக்களால் வெளியேற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சீன அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து கோபமடைந்த அப்பகுதி மக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வாருங்கள். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்," என அவர்கள் முழக்கமிட்டனர்.

