கோலாலம்பூர்: பக்கதான் ஹரப்பானுடன் இணைந்து அரசாங்கம் அமைக்க ஒப்புக்கொண்டுள்ள போதும், பாரிசான் நேஷனல் அமைச்சரவையில் இடம் கேட்கக்கூடாது என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
டிஏபி அல்லது பக்கத்தான் ஹரப்பானின் தலைவரும் பிரதமருமான அன்வாருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று பாரிசான் நேஷனல் தேர்தலுக்கு முன்பு முடிவு செய்திருந்ததே இதற்கு காரணம் என்று விக்னேஸ்வரனை மேற்கோள்காட்டி மலேசியாகினி ஊடகம் தெரிவித்துள்ளது.
"டிஏபி வேண்டாம், அன்வார் வேண்டாம், பெர்சத்து வேண்டாம்' என்ற அம்னோவின் முடிவு இன்னும் பொருந்தும். அது பாரிசானிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதனால்தான் பாரிசான் முன்பு நடுநிலையாக இருந்து அரசாங்கத்தில் சேரவில்லை.
"ஆனால், மன்னரின் ஆலோசனையைத் தொடர்ந்து, ஐக்கிய அரசாங்கத்தின் கீழ் அன்வாரை ஆதரிப்பதற்காக பாரிசான் தனது நிலைப்பாட்டை மாற்றியது," என்று விக்னேஸ்வரன் சொன்னார்.
எனினும் அன்வார் தனது அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விக்னேஸ்வரன், பாரிசானுக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்க அன்வார் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றார்.

