பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிலையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 1.3 மில்லியன் பவுண்ட் செலவில் அந்தச் சிலையை பிரிட்டிஷ் அரசாங்கம் வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வரிப்பணத்தில் அச்சிலை வாங்கப்பட்டுள்ளது பிரிட்டிஷ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உருவம் அமர்ந்திருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட அந்தச் சிலை 1980ல் புகழ்பெற்ற கலைஞரால் வடிவமைப்பட்டது. சென்ற மாதம் அது ஏலத்துக்கு வந்தபோது, அரசாங்க அமைப்பு ஒன்று அதை வாங்கியதாக நம்பப்படுகிறது.
விண்ணை முட்டும் பணவீக்கத்தால் பிரிட்டன் தவிக்கும் நிலையில், பல பொதுமக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மில்லியன் கணக்கான பவுண்ட் செலவில் சிலை ஒன்றை வாங்குவது அவசியமா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தேவையற்ற ஆடம்பரம் என்பது பலருடைய கருத்து.
சிலையை வாங்கியது அரசாங்க அமைப்பு என்றும் அதில் எந்தவொரு அரசியல்வாதிக்கும் தொடர்பு இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.


