புத்ராஜெயா: மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், தனது அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக அமைச்சர் பதவி வெகுமதியாக வழங்கப்படவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான், பாரிசான் நேஷனல், கபுங்கான் சரவாக் கட்சி ஆகிய மூன்று முக்கிய கூட்டணிகளுடன் அமைச்சர் நியமனங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
அமைச்சர்கள் எண்ணிக்கை, அமைச்சர்களின் சம்பளம் ஆகிய இரண்டையும் குறைக்க அவர் உறுதி தெரிவித்தார்.
"அமைச்சரவை அளவைக் குறைக்க விரும்புகிறேன். அமைச்சர் பதவி வெகுமதியாக அளிக்கப்படும் போக்கை தொடர விரும்பவில்லை. என்னை ஆதரிப்பதற்காக அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி தர விரும்பமில்லை," என்று வாழ்க்கைச் செலவு தொடர்பான தேசிய செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
"ஊழலுக்கு எதிரான கடப்பாடு, தேசிய பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.
"என்னுடைய கொள்கைகள், ஊழலற்ற அரசாங்கம் அமைப்பதற்கான என்னுடைய கடப்பாடு, பொருளியலுக்கு புத்துயிரூட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் எனக்கு ஆதரவு அளிப்பதையே நான் விரும்புகிறேன்," என்று அன்வார் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அமைச்சரவையை சிறியதாக வைத்திருக்கவும் அமைச்சர்கள் தங்களுடைய சம்பளத்தைக் குறைக்கவும் அன்வார் விருப்பம் தெரிவித்திருந்தார்.
முந்தைய அரசாங்கத்தில் 31 அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் புதிய அமைச்சரவையில் அதிகபட்சமாக 25 அமைச்சர்கள் இருப்பார்கள் என அன்வார் முன்பு சொல்லியிருந்தார்.

