நாட்டு மக்களுக்கு ஆற்றிய காணொளி உரையில் உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி கவலை
ரஷ்யா தனது நாட்டின் மீது புதிய தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டு வருவதாகக் கூறிய உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி, கடும் குளிர்கால தற்போதைய சூழலில், நாட்டு மக்களையும் தற்காப்புப் படையினரையும் மின்சார கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்குதலை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மைய வாரங்களில் ரஷ்யா உக்ரேனின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வந்துள்ளது. இதனால் மின்சார வசதிக்கு இடையூறு ஏற்பட்டதுடன் அப்பாவிப் பொதுமக்களும் மரணமடைந்துள்ளனர்.
இதில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பெருமளவு சேதம் ஏற்படுத்தியதுடன் தட்பவெப்ப நிலை செல்சியஸ் பூஜ்யம் ஆன நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் வெளிச்சம், தண்ணீர், வெப்பமூட்டும் வசதி இன்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
"பயங்கரவாதிகள் புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர், இது எங்களுக்குத் தெரியவந்துள்ள உண்மைத் தகவல்," என்று ஞாயிறன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய காணொளி உரையில் அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.
"மேலும், அவர்கள் கையில் ஏவுகணைகள் உள்ளவரை அவர்கள், துரதிர்ஷ்டவசமாக, அமைதி காக்க மாட்டார்கள்," என்று தெரிவித்தார்.
வரும் வாரம் இதற்கு முந்தைய வாரம் போலவே சிரமமான ஒன்றாக இருக்கக்கூடும் என்று அவர் சொன்னார்.
உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியின் உரைக்கு ரஷ்யாவிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.
இந்நிலையில், உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் தட்பவெப்ப நிலை உறைபனி நோக்கிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், மின்சார விநியோகத்துக்கு இடையூறு, பனிக்கால குளிரை ஈடுகட்ட வீடுகளுக்கான வெப்பமூட்டும் வசதி ஆகியவை இன்றி மக்கள் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.
கியவ் நகர அதிகாரிகள் மின்சார கட்டமைப்பை சீர் செய்யும் பணியை நிறைவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பொதுமக்களின் தேவை அதிகமாக இருப்பதால், ஓரளவு தட்டுப்பாடு இருக்கவே செய்யும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, மின்சாரக் கட்டமைப்பின் மீது தான் நடத்திய தாக்குதல் பொதுமக்களைக் குறிவைத்து அல்ல என்று ரஷ்யா கூறியுள்ளது. உக்ரேன் விரும்பினால் அது தனது கோரிக்கைகளுக்கு இணங்கி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் தன் நாட்டு மக்கள் படும்பாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம் என்றும் ரஷ்யா கூறியது.
எனினும், ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய நாட்டுப் பகுதிகள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்று கூறும் நிலையில், உக்ரேனிய நாட்டின் இறையாண்மை பேச்சுவார்த்தைக்கு உரியதல்ல, அதனால் பேச்சுவார்த்தைக்கு தான் உடன்படப் போவதில்லை என்றும் விளக்கியுள்ளார்.

