ஈப்போ: மலேசியாவில் ஆண்டிறுதி பருவமழை பெய்து வருவதால் கேமரான் மலைப் பகுதியில் காய்கறி விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஆள் பற்றாக்குறைப் பிரச்சினையை விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் மோசமான வானிலையால் அவர்கள் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து மலேசியாவில் காய்கறிகளின் விலை 50 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான வெப்பநிலை மற்றும் குறைந்த அளவிலான மகரந்தச் சேர்க்கை ஆகிய காரணங்களால் காய்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என கேமரன் மலைப்பகுதி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாய் ஈ மோங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்டுள்ள மோசமான வானிலை நிலவரம் காய்கறி விளைச்சலில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திரு சாய் கூறினார்.
கேமரன் மலைப் பகுதியில் எப்போதும் வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதால் காய்கறி உற்பத்தி வெகுவாகக் குறையும். அதையடுத்து சில காய்கறிகளின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
காய்கறிகளுக்கு ஏற்ப 30 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு வரை விலை ஏறக்கூடும். குறிப்பாக தக்காளி, மிளகாய், குடமிளகாய், பீன்ஸ், வெள்ளரிக்காய், செடிகளாக வளர்க்கப்படும் கீரை வகைகள் ஆகியவற்றின் விலை கணிசமாக ஏறக்கூடும்.
இருப்பினும் பசலைக் கீரை, முட்டைக்கோஸ் உள்ளிட்ட 80 வகைக் காய்கறிகளின் விலைகளில் அதிக ஏற்றம் இருக்காது என்று திரு சாய் கூறினார்.
இருப்பினும் காய்கறி உற்பத்தி வரும் ஜனவரி மாதம் முதல் பருவநிலைக்கேற்ப வழக்கநிலைக்குத் திரும்பும் என்று தாம் நம்புவதாக திரு சாய் தெரிவித்தார்.
காய்கறிகள் தட்டுப்பாடு நிலவும் போது முட்டைகளை மக்கள் விரும்பி வாங்கக் கூடும். எனவே முட்டைகளுக்கான தேவை முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடும்.
ஏற்கெனவே இந்த ஆண்டில் முட்டையின் தேவை அதிகரிப்பை ஈடுகட்டும் வகையில் முன்கூட்டியே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சின் பொதுச்செயலாளர் ஹஸ்லினா அப்துல் ஹமித் தெரிவித்துள்ளார்.

