கோலாலம்பூர்: மலேசியாவின் நிதித் துறை செலவிட்ட 620 பில்லியன் ரிங்கிட் ($190 மில்லியன்) பணத்திற்குக் கணக்கு எதுவும் இல்லை என்று கூறப்படுவது பொய்த் தகவல் என்று அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (படம்) தெரிவித்து உள்ளார்.
அனைத்து செலவினங்களும் அரசாங்கக் கணக்குகளில் பதியப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். the handle @mohayusba என்ற முகவரியைப் பயன்படுத்தும் யூசோப் பாசெக் என்பவர் பதிவேற்றிய ஒரு தகவலை தனது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்ட திரு இஸ்மாயில், அந்தத் தகவல் பொய் என்று தெரிவித்தார்.
மலேசியாவில் கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தின்போது அதாவது 2020ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சு 620 பில்லியன் ரிங்கிட் பணத்திற்கு கணக்கு எதுவும் பதியவில்லை என்று தனது பதிவில் திரு யூசோப் தெரிவித்து இருந்தார்.
முன்னாள் பிரதமர்களான முகைதீன் யாசினும் திரு இஸ்மாயிலும் மற்றவர்கள் யாரும் பிரதமராக வந்துவிடக் கூடாது என்று விரும்பினார்கள் என்றும் இதற்கு அதுவே காரணம் என்றும் திரு யூசோப் மேலும் தெரிவித்து இருந்தார். இதற்குப் பதிலளித்த முன்னாள் பிரதமர் இஸ்மாயில், கொவிட்-19 காலகட்டத்தின்போது அரசாங்கம் நடைமுறைப்படுத்திய எட்டு திட்டங்களின் மொத்த மதிப்பு 530 பில்லியன் ரிங்கிட் என்று தெரிவித்தார். அதில் பெரும் பகுதி அரசாங்கச் செலவினம் அல்ல என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் நேரடியாகச் செலவிட்ட தொகை 10 பில்லியன் ரிங்கிட்தான். இதற்கு நாடாளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பிரதமராக இருந்த முகைதீன் யாசின், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க பொருளியலுக்கு உதவ கூடுதலாக 620 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்று அறிவித்து இருந்தார்.

