துபாய்: ஈரானின் நன்னடத்தைக் காவல் படை கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, இவ்வாரம் மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
‘ஹிஜாப்’ எனும் தலையங்கியைச் சரியாக அணியாததாகக் கூறி, 22 வயது குர்தியப் பெண்ணான மஹ்சா அமினி என்பவரை இந்த நன்னடத்தைக் காவல் படையினர் செப்டம்பர் 13ஆம் தேதியன்று கைதுசெய்திருந்தனர். அதையடுத்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவர், மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.
அதையடுத்து நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து நன்னடத்தைக் காவல் படை கலைக்கப்பட்டுவிட்டதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
இக்காவல் படை உள்துறை அமைச்சின்கீழ் இயங்கி வந்த நிலையில், கலைக்கப்பட்டதை அமைச்சு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் காவல் படையை மேற்பார்வையிடும் பொறுப்பு, அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகம்மது ஜஃபார் மொண்டாஸேரியுடையது அல்ல என்றும் ஈரானின் அதிகாரத்துவ ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலையங்கி அணியும் கட்டாய சட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ளாது என்று பல்வேறு ஊடக நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, ஈரானின் சமயத் தலைவர்களுக்குச் சவால் விடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று நாள் வேலை நிறுத்தம் கோரியுள்ளனர்.
ஈரானிய நகரங்கள் பலவற்றில் நேற்று கடைகள் திறக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.