வாஷிங்டன்: அமெரிக்காவின் உயர்மட்ட பேராளர் குழு ஒன்று விரைவில் சீனா செல்கிறது.
அண்மையில் பாலித் தீவில் நடைபெற்ற மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து அமெரிக்க மூத்த பேராளர் குழுவின் சீனா பயணம் அமைகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் அடுத்த ஆண்டு சீனா செல்கிறார். அதற்கு முன்னேற்பாடாகவும் குழுவின் பயணம் இடம்பெறுகிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
முன்னதாக வெள்ளை மாளிகையின் மூத்த பேச்சாளர் ஒருவர், உள்நாட்டுப் பொருளியல் சவால் களையும் ஆசிய எதிர்ப்புகளையும் எதிர்கொள்வதால் குறுகிய காலத்தில் அமெரிக்காவுடன் உறவை சீர்படுத்திக்கொள்ள சீனா விரும்பு வதாகத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் இயக்குநரான லாரா ரோசன்பர்கர் தலைமையில் குழு சீனா செல்கிறது. இக்குழு, நேற்று முதல் வரும் 14ஆம் தேதி வரை சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறது.
கடந்த மாதம் இந்தோனீசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டையொட்டி சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீனா அதிபர் ஸி ஜின்பிங்கும் தைவான், வடகொரியா விவகாரங்கள் பற்றி பேச்சு நடத்தினர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பனிப்போர் ஏற்படுவதைத் தவிர்க்கும்விதமாக இந்தப் பேச்சு இடம்பெற்றது.
மனித உரிமை மீறல், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் பொருளியல் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் வேளையில் அடிக்கடி தொடர்புகொண்டு பேச இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கு இடையே போட்டியை பொறுப்புடன் நிர்வகிக்கவும் ஒத்துழைப்புக்குச் சாத்தியமான துறைகளை ஆராயவும் பேராளர் குழு பேச்சு நடத்தும் என்றும் திரு பிளிங்கனின் சீனப் பயணத்திற்கு இக்குழு அடித்தளத்தை அமைக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

