பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடந்த வாரம் திடீரென்று தளர்த்தப்பட்ட நிலையில், வீடுகளிலும் அலுவலகங்களிலும் கிருமி தீப்போல பரவி வருகிறது.
மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. மருந்துகளைப் பெற நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். சீனாவின் மருத்துவக் கட்டமைப்பு பெரும் அழுத்தத்தில் உள்ளது.
குறிப்பாக பெய்ஜிங்கில் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,133 பேருக்குத் தொற்று என்று அரசாங்கம் கூறியது.
ஆனால் தொற்று பன்மடங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெய்ஜிங்கின் அவசர உதவித் தொலைபேசி சேவைக்கு அதிகமானோர் அழைத்து வருவதால், அழைப்புகளைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு அது கிடைக்காமல் போகக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவின் பல இடங்களில் விரைவுப் பரிசோதனைக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கருவிகளுக்கான தேவையும் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. பற்றாக்குறை நீங்க இரு மாதங்கள் பிடிக்கும் என்று தகவல்கள் கூறின.
பெய்ஜிங்கின் சில மருத்துவமனைகளில் விடுப்பில் இருந்த மருத்துவர்களும் தாதிகளும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு, இலேசான அறிகுறிகள் உள்ள மருத்துவப் பணியாளர்கள் வேலைக்கு வரும்படி கூறப்பட்டுள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான பரவலான ஆர்ப்பாட்டங்களின் காணரமாக சீனா அவற்றைத் தளர்த்தி வருகிறது. ஆனால் அது அவசரகதியில் நிகழ்வதாக கவலை ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும், சீனா தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. கிருமி தொற்றியோரின் தொடர்புகளைக் கண்டுபிடிக்க, சீன மக்கள் செல்லும் இடங்களைக் கண்காணிக்கும் கைப்பேசி செயலி ரத்து செய்யப்பட்டது.

