கியவ்: ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி மீண்டும் அரசதந்திர முயற்சிகளை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
திரு ஸெலன்ஸ்கியுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரேனின் ஆகாயத் தற்காப்பை பலப்படுத்த அமெரிக்கா உதவிசெய்யும் என்று உறுதி தந்துள்ளார்.
ஜிஏழு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நேற்று நடத்திய கூட்டங்களில் ரஷ்யாமீது கூடுதல் பொருளியல் தடைகளை விதிப்பது, உக்ரேனை மறுநிர்மாணிக்க நிதி வழங்குவது ஆகியவை பற்றி பரிசீலிக்கப்பட்டன.
இந்நிலையில் ரஷ்யப் படைகள் கிழக்கு, தெற்கு உக்ரேனில் கடும் தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரேனிய அரசாங்கம் கூறியுள்ளது. கியவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல மில்லியன் பேருக்கு மின்சாரத் தொடர்பு மீண்டும் கிடைத்தபாடில்லை.

