பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஒதுக்குப்புறமான வீடு ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடர்வதாக குவீன்ஸ்லாந்து காவல்துறையினர் நேற்று இரவு தெரிவித்தனர். அடுத்த அறிவிப்பு வரும்வரை குடியிருப்பாளர்களை வெளியில் வரவேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மாண்ட காவல்துறையினரில் ஒருவர் ஆண். மற்றவர் பெண்.
மேலும் ஓர் அதிகாரிக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் நான்காமவர் தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.
பிரிஸ்பனிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வியம்பிலா எனும் ஒதுக்குபுற இடத்தில் அச்சம்பவம் நடந்தது. அங்குள்ள வீட்டில் ஒருவரைக் காணவில்லை என்று காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அதிகாரிகளைக் கொலையாளிகள் திட்டமிட்டு திடீரென்று தாக்கிக் கொன்றதாகக் கூறப்பட்டது. ஆஸ்திரேலிய காவல்துறையில் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் உயிரிழப்பு இதுவாகும்.

