காபூல்: சீன அரசதந்திரிகளும் வணிகர்களும் அதிகம் தங்கிக் கூடும் காபூல் ஹோட்டலில் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் கிளை அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு தாலிபான் ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு, சீனக் குடிமக்கள்மீது நடத்தப்பட்டுள்ள முதல் தாக்குதல் இது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினர் கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, அவர்களுடன் நல்லுறவு கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளில் சீனாவும் ஒன்று.
மத்திய கிழக்கில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உள்ளூர் கிளையான இஸ்லாமிக் ஸ்டேட்-கொரசான் நேற்றைய தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாகக் கூறியது.
ஆப்கான் தலைநகரின் வசதியான பகுதியில் உள்ள காபூல் லோங்கான் ஹோட்டலுக்குள் அக்குழுவினர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அந்தத் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் மாண்டனர் அல்லது காயமடைந்தனர் என்று அமைப்பு கூறியுள்ளது.
ஆனால் தலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் ஸாபிபுல்லா முஜாஹித், தப்பிக்கும் பொருட்டு ஹோட்டல் அறை பால்கனியிலிருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் இருவர் காயமடைந்ததாகக் கூறினார். மேலும் அரசாங்கப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் மாண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தத் தாக்குதலால் சீனா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் நேற்று தெரிவித்தார். அச் சம்பவம் பற்றி சீன அரசதந்திரிகள் ஆப்கானிஸ்தானிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இஸ்லாமிக் ஸ்டேட்-கொரசான் தலிபான் ஆட்சியாளர்களுடன் நட்பு கொண்டுள்ள நாடுகளுடன் தொடர்புடைய இலக்குகளின்மீது கடந்த சில மாதங்களில் நடத்தியுள்ள மூன்றாவது தாக்குதல் இதுவாகும். செப்டம்பரில் ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே நடந்த தாக்குதலுக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றது. அதில் பலர் உயிர் இழந்தனர்.

