பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜோகூர், பாஹாங், திரங்கானு, பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அந்நாட்டின் நீர்ப்பாசன, வடிகால் துறை எச்சரித்துள்ளது.
பாஹாங், சரவாக், ஜோகூர், திரங்கானு ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள சில ஆறுகளின் நீர்மட்டம் எச் சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது. தீபகற்ப மலேசியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் அதிகபட்ச அளவை எட்டியிருக்கின்றன என்று தேசிய நீர் சேவை ஆணையத்தின் தகவல் தொடர்பு, பயனீட்டாளர் விவகார இயக்குநர் முகமது ஃபாசில் இஸ்மாயில் தெரிவித்தார்.
இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறிய அவர், நேற்று பிற் பகல் ஒரு மணி நிலவரப்படி வெள்ளம் அபாய இடங்களில் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூடும் யோசனை இல்லை என்றார்.
"மொத்தம் 57 அணைகள் உள்ளன. இவற்றில் மூல நீர் ஆதாரங்கள் தொடர்பான 47 பெரிய அணைகள் தீபகற்ப மலேசியாவில் உள்ளன.
பெரும்பாலான அணைகள் அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டி யுள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களில் பருவமழை தொடர்ந்து பெய்யும் என்று நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதனை சமாளிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

