கியவ்: ரஷ்யா, ஈரானில் தயாரிக்கப்பட்ட வானூர்திகளைக் கொண்டு கியவ் நகரத்தைத் தாக்கியதாக உக்ரேன் கண்ணீர் வடித்துள்ளது.
ஆனால் பேரிழப்புகள் ஏற்படாமல் வான் தற்காப்பு சாதனங்கள் தடுத்துவிட்டதாக அந்நகரத்தின் அதிகாரிகள் கூறினர்.
மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் இரண்டு நிர்வாகக் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் உயிர்ச்சேதம் இல்லை என்றும் கியவ் நகர மேயர் விடாலி கிளிட்கோ கூறினார். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு நிலைமை சீரடைந்தது என்றார் அவர்.
"அதிகாலையிலிருந்து எதிரி வானூர்திகள் இந்த வட்டாரத்தைத் தாக்கின. பயங்கரவாத நாடு மீண்டும் இவ்வட்டாரத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளையும் தலைநகரையும் குறிவைத்துத் தாக்கியது," என்று கியவ் ஆளுநர் குறிப்பிட்டார்.
உக்ரேனிய விமானப் படையின் பேச்சாளர் யூரி இஹ்னாட், வானூர்திகளை சுட்டு வீழ்த்துவது சிரமம் என்பதால் இருட்டாக இருக்கும்போது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
"வான் பாதுகாப்பு முறை சிறப்பாக வேலை செய்தது. 13 வானூர்திகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன," என்று அவர் சொன்னார். இதற்கிடையே அனைத்து வானூர்திகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதை உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி பாராட்டி யிருக்கிறார்.

