மாஸ்கோ: உக்ரேனுக்கு எதிரான போர் தொடர்பாக தமது ராணுவ உயர் அதிகாரிகளுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக ரஷ்ய அரசாங்கம் நேற்று தெரிவித்தது. உக்ரேனுக்கு எதிரான தாக்குதல்களை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனில் சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் ராணுவப் பிரிவின் தலைமையுடன் அதிபர் புட்டினே ஒருநாள் முழுவதும் கலந்துரையாடியதாக ரஷ்ய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷொயிகுவுடனும் ராணுவத் தளபதி வெலரி கெரசிமோவுடனும் அதிபர் புட்டின் கலந்துரையாடினார். பிறகு ரஷ்ய ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளின் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
உக்ரேன் போரில் குறுகியகால, நடுத்தரகால இலக்குகள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு அதிபர் புட்டின் ராணுவ உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதை ரஷ்யத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கிடையே, உக்ரேனின் பல நகரங்களை நோக்கி அஷ்யா நேற்று முன்தினம் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல உக்ரேனிய நகரங்கள் இருளில் வாடின. பனிக்காலம் என்பதால் கடுங்குளிரில் உக்ரேனிய மக்கள் அவதியற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனைக் குறுகிய காலத்திலேயே கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்துடன் போரைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டதை அடுத்து, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தனது வியூகத்தை அது மாற்றி உள்ளது.
நிலவழித் தாக்குதல்களைக் குறைத்துக்கொண்டு ஏவுகணைத் தாக்குதலில் அது கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, உக்ரேனிய ராணுவத் தளங்களை ரஷ்யா தகர்த்து வருகிறது.
ஏற்கெனவே கடும் குளிரால் துன்புறும் உக்ரேனியர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தாக்குதல்கள் போர் குற்றங்களுக்குச் சமமானவை என்று பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டி உள்ளன. ரஷ்யாவின் தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் சாடியுள்ளார்.

