கொழும்பு: பொருளியல் நெருக்கடி நிலையால் நிலைகுலைந்துள்ள இலங்கை, அனைத்துலக பண நிதியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு செலவுகளைக் குறைக்கும் நோக்கில் 16,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு எடுத்துள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள பரிந்துரையின்படி ராணுவ வீரர்கள் அவர்களாகவே பணியிலிருந்து ஓய்வுபெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் ராணுவத்துக்காக செலவழிக்கப்படும் தொகையைக் குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
பணியாற்றாமல் வெளிநாடுகளில் இருக்கும் ராணுவம், ஆகாயப் படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கைத் தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்கள் தங்கள் ராணுவப் பிரிவுக்குத் திரும்பாமலேயே பணியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 16,141 ராணுவ வீரர்கள் பொது மன்னிப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.
அவர்களில் ராணுவ அதிகாரிகளும் மற்ற பதவிகளை வகிப்பவர்களும் அடங்குவர்.
"கிட்டத்தட்ட 21 ராணுவ அதிகாரிகளும் 15,838 ராணுவ வீரர்களும் மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துவிட்டனர். அவர்கள் கூடிய விரைவில் பதவி விலகல் கடிதங்களையும் கொடுத்துவிடுவர்," என்று ராணுவம் கூறியது.

