கோலாலம்பூர்: வெள்ளம் காரணமாக மலேசியாவில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களில் 20,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிளந்தானின் தும்பாட் நகரில் வீடு ஒன்று வெள்ளநீரில் மூழ்கியது. அதையடுத்து, மின்சாரம் தாக்கி வீட்டில் இருந்த மூன்று சகோதரிகள் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
மூவரும் 20 வயதுக்கும் 27
வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
வீட்டுக்கு வெளியே அவர்களது சடலங்கள் மிதந்துகொண்டிருந்ததை மீட்புப் பணியாளர்கள் கண்டதாக மலேசியாவின் ஆஸ்ட்ரோ அவானி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வெள்ளம் வீட்டுக்குள் புகுந்தபோது அந்த மூன்று சகோதரிகளில் ஒருவர் வீட்டுக்கு முன்பு இருந்த கம்பம் ஒன்றைப் பிடித்துக்கொண்டதாகவும் அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இருவரையும் மின்சாரம் பதம் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சகோதரிகளின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, திரங்கானுவில் 11,415 பேரும் கிளந்தானில் 8,645 பேரும் ஜோகூரில் 75 பேரும், பேராக்கில் 49 பேரும், பாகாங்கில் 40 பேரும் துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. கிளந்தான் மாநிலத்தை திரங்கானுவுடன் இணைக்கும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அவ்வழியாகச் செல்ல வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓர் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் திரங்கானுவிலிருந்து தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்ல பயன்படுத்தப்படும் ஈஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வரு கின்றன.

