பெய்ஜிங்: பல வாரங்களுக்குப் பிறகு சீனாவில் மீண்டும் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், சீன அரசாங்கம் வெளியிடும் அதிகாரபூர்வ மரண எண்ணிக்கை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
சீனாவில் அறவே கொவிட்-19 கிருமித்தொற்று இல்லாத நிலையை இலக்காகக் கொண்டு அந்நாடு பல கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தது.
ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்புநிலை, அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, அண்மையில் கட்டுப்பாடுகளைச் சீனா தளர்த்தியது. அதனைத் தொடர்ந்து, பல நகரங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது.
இதற்கிடையே, கொவிட்-19 காரணமாக இருவர் மாண்டுவிட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று அறிவித்தது.
இம்மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு இவைதான் சீனாவில் பதிவாகி இருக்கும் முதல் கொவிட்-19 மரணங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சீனாவின் பல நகரங்களில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பைக் காணும்போது அதிகாரிகள் கூறும் மரண எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் நம்பக்கூடிய அளவுக்கு இல்லை என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
கொவிட்-19 காரணமாக
உயிரிழந்தோரைத் தகனம் செய்வதற்காக தலைநகர் பெய்ஜிங்கில்
அமைக்கப்பட்டுள்ள தகனச்சாலையில் பல பிணப்பெட்டிகளைக் கண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அங்கு முழுப் பாதுகாப்பு ஆடை அணிந்த அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
ஆனால் மாண்டோர் அனைவரும் கொவிட்-19 காரணமாக இறந்தார்களா என்பது குறித்து அந்தச் செய்தியாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்ட கேள்விகளுக்கு சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் பதில் அளிக்கவில்லை.
கொவிட்-19 காரணமாக இதுவரை சீனாவில் வெறும் 5,237 பேர் மாண்டுவிட்டதாக அந்நாடு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இது உண்மையாக இருந்தால் 1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் கொவிட்-19 மரண விகிதம் மிகவும் குறைவானதாக இருக்கும்.
ஆனால் ஆரம்பத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் சீன மக்களிடையே கொவிட்-19 கிருமிக்கு எதிரான இயற்கை எதிர்ப்புச் சக்தி போதுமான அளவில் இல்லை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சீனாவில் பல முதியவர்கள் இன்னமும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததை அவர்கள் சுட்டினர்.
அடுத்த சில மாதங்களில் சீனாவில் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 காரணமாக மரணம் அடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

