கோலாலம்பூர்: மலேசியாவின் சில பகுதிகளில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைவிட மலேசியாவில் இவ்வாண்டு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அதிகம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து மாநிலங்களில் 66,000க்கும் மேற்பட்டோர் துயர்துடைப்பு முகாம் களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, வெள்ளம் காரணமாக ஐந்து பேர் மாண்டுவிட்டதாக மலேசிய அரசாங்கம் நேற்று தெரிவித்தது. மாண்டோரில் 15 மாதக் குழந்தையும் அடங்கும்.
மலேசியாவின் கிழக்குக் கடலோர மாநிலங்களான கிளந்தானும் திரங்கானுவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
துயர்துடைப்பு முகாம்களில் இருப்போரில் 17,326 பேர் கிளந்தானையும் 37,792 பேர் திரங்கானுவையும் சேர்ந்தவர்கள்.
நிலைமை மேலும் மோச
மடையக்கூடும் என்று மலேசிய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாகாங், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களிலும் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் வீடு
களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கிளந்தானில் 1967ஆம்
ஆண்டுக்குப் பிறகு இவ்வாண்டில் ஆக அதிகமான மழை பெய்துள்ளது. இம்மாதம் 18ஆம் தேதியன்று கிளந்தானில் உள்ள சில கிராமங்களில் இதுவரை இல்லாத மழை பதிவானது.
"கிளந்தானில் இதுவரை இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால். அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து கரைபுரண்டோடியது.
"இதனால் இதற்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்
களிலும் வெள்ளநீர் புகுந்துவிட்டது. அண்டை நாடான தாய்லாந்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை இன்னும் மோசம் அடையக்கூடும் என்று அஞ்சப்
படுகிறது," என்று கிளந்தானின் வடிகால், நீர்ப்பாசனத்துறை
இயக்குநர் கமால் முஸ்தஃபா தெரிவித்தார்.
இதற்கிடையே, வெள்ளம் காரணமாக மலேசியாவெங்கும் வீடுகளிலிருந்து வெளியேறி துயர்துடைப்பு முகாம்களில் தஞ்சம் அடைவோர் எண்ணிக்கை அதி
கரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை அடுத்த சில நாள்களில் மேலும் உயரக்கூடும் என்று நம்பப்படுகிறது.
வடகிழக்கு பருவமழைக்காலத்தால் பெய்த கனமழையை அடுத்து, நாட்டில் உள்ள பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் அர்மிஸான் முகம்மது அலி தெரிவித்தார்.
469 துயர்துடைப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
துயர்துடைப்பு முகாம்களில் இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்க தேசிய பேரிடர் நிவாரண நிதி மூலம் எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 5 மில்லியன் ரிங்கிட் நன்கொடை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பேரிடர் நிர்வாகத்துக்கும் மீட்புப் பணிகளுக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணியில் மலேசிய மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

