காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து கல்வி பயில்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, மனித உரிைம மீறலாகும் என்று அமெரிக்காவும் ஐக்கிய நாட்டு நிறுவனமும் கண்டித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பு சென்ற ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தனது ஆட்சி கடுமையானதாக இருக்காது என்று அந்த அமைப்பு உறுதியளித்திருந்தது.
எனினும், பெண்களின் வாழ்க்கை முறைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தாலிபான் பல கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி வந்துள்ளது.
"நாங்கள் கூறும் வரை பெண்களுக்குக் கல்வி வழங்குவதை நிறுத்தவும்," என்று ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி அமைச்சர் நெடா முகம்மது நடீம் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதம் அந்நாட்டின் எல்லா அரசாங்க, தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தடை குறித்த விவரத்தை உறுதிப்படுத்தினார்.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பல பெண்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாயினர். வருத்தத்தில் பலர் நண்பர்களை அணைத்தபடி அழுதனர், கதறினர்.
கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவைகளைப் போன்ற உணர்வு தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் கூறினர்.

