பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கெண்டிங் பகுதியில் உள்ள பாத்தாங் காலி என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் இருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து அந்தப் பேரிடரில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகி விட்டது என்று தேசியப் பேரிடர் நிர்வாக முகவை தெரிவித்தது.
இன்னமும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக மீட்கப்பட்ட உடல்களில் இரண்டு உடல்கள் சிறார்களின் உடல்கள். ஓர் ஆடவரின் உடலும் ஒரு மாதின் உடலும் மீட்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரிகள் கூறினர் என்று தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் நேற்று ஏழாவது நாளாக தேடி, மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன.
நிலச்சரிவு டிசம்பர் 16ஆம் தேதி நிகழ்ந்தது. 30 மீட்டர் உயரத்தில் இருந்து 450,000 கன அடி மண் அப்படியே சரிந்ததில் கீழே முகாம்களில் தங்கியிருந்த 94 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 61 பேர் தப்பிவிட்டனர். 30 பேர் பலியாகிவிட்டனர். இன்னமும் மூன்று பேரைக் காணவில்லை. தேடி மீட்கும் பணிகளில் பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்த சுமார் 650 பேர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியும் ஆதரவும் அளிக்கப்படும் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்தில் மாண்டவர்களின் குடும்பங்களுக்கு 10,000 ரிங்கிட் (US$2,260) இழப்பீடாகக் கொடுக்கப்படும். உயிர் பிழைத்தவர்களுக்கு 1,000 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இன்னமும் காணாமல் போயிருக்கும் மூவரைத் தேடும் பணி தொடர்கிறது.
நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில் 7 மீட்டர் ஆழத்தில் இருந்து மீட்புப் படையினர் மேலும் நான்கு உடல்களைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தனர். படம்: டுவிட்டர்

