தோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடுங்குளிர், மிகக் கடுமையான பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 13 பேர் மாண்டுவிட்டனர், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வடக்கில் உள்ள ஹொக்காய்டோவிலிருந்து தென்மேற்கில் உள்ள குயூஷுவுக்குப் பலத்த காற்று வீசுவதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்தது.
இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு கிறிஸ்துமஸ் வாரயிறுதியின்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பானிய மக்களை அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜப்பானின் சில பகுதிகளில் பனிப்புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அவ்விடங்களில் உள்ள மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.
ஜப்பானைக் கடுங்குளிர் வாட்டி வரும் நிலையில், ஹொக்காய்டோவில் உள்ள 2,077 மீட்டர் உயரமுள்ள தொகாச்சி மலையில் சிக்கித் தவித்த ஹாங்காங் நாட்டவர் மீட்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் தமது உயிருக்காகப் போராடுவதாகவும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவருடன் இருந்த இருவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 200 உள்நாட்டு விமானச் சேவைகள் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டன.
நிகாட்டா மாநிலத்தைச் சேர்ந்த சாடோ தீவில் கடந்த ஐந்து நாள்
களாக அங்குள்ள மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சில இடங்களில் உள்கட்டமைப்பு கள் சேதமடைந்தன. குறி்ப்பாக, சில வீடுகளின் கூரைகளைப் பலத்த காற்று பெயர்த்துக்
கொண்டுச் சென்றது.
ஹொக்காய்டோவில் பல மின்கம்பங்கள் சாய்ந்தன. பொருத்தப்பட்ட 244 சூரிய சக்தி தகடுகளில் பாதி சேதமடைந்தன.
இதற்கிடையே, நாளை வரை ஜப்பானெங்கும் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் தலைநகர் தோக்கியோவில் வெயில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பனிப்புயல்
இந்நிலையில், அமெரிக்காவையும் கடுங்குளிர், பலத்த காற்று புரட்டிப் போட்டு வருகிறது.
இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அமெரிக்கர்கள் பலர் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இம்முறை கடுமையான வானிலை காரணமாக அவர்களது பயணத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கடுமையான பனிப்பொழிவு காரணமாகச் சாலைகளில் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணம் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

