பெட்டாலிங் ஜெயா: மலேசிய சுகாதாரத்துறை மட்டுமல்லாது, மலேசியாவின் அனைத்துத் துறைகளும் அங்கு பணிபுரியக்கூடிய உள்ளூர் திறனாளர்களை வெளிநாடுகளிடம் இழப்பதாக மலேசியாவின் புதிய சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 30 தலைசிறந்த புதிய மருத்துவர்களை சிங்கப்பூரிடம் மலேசியா இழப்பதாக மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் அடீபா கமருல்ஸாமான் தெரிவித்ததை அடுத்து, அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஸலிஹாவின் கருத்துகள் அமைந்தன. மலேசியத் திறனாளர்கள் மலேசியாவில் பணிபுரியாமல் மற்ற நாடுகளில் வேலை செய்வது மலேசியாவுக்கு ஏற்படும் இழப்பு என்றார் அவர்.
இந்நிலையில், மலேசிய மருத்துவர்களுக்கான பயிற்சிகளை மேம்படுத்துவது, தெளிவான வாழ்க்கைத் தொழில் பாதையை வகுப்பது, பணியிடச் சூழலை மேம்
படுத்துதல் போன்றவை குறித்து சுகாதாரத்துறை பரிந்துரைத்திருப்பதை அமைச்சர் ஸலிஹா சுட்டினார். இருப்பினும், பயிற்சி பற்றாக்குறை, பதவி உயர்வு வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளை களைந்தாலும் மலேசிய மருத்துவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதை முழுமையாகத் தடுத்துவிடலாம் என்ற உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது என்றார் அவர்.
"சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு மலேசியாவைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். எனவே ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர், ஆனால் இதே கருத்தை அனைத்துச் சூழல்களிலும் பயன்
படுத்த முடியுமா? சிங்கப்பூரின் சில மருத்துவர்கள்கூட ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணிபுரிகின்றனர். சிங்கப்பூரின் சுகாதாரத்துறையும் இதே சவாலை எதிர்நோக்குகிறது," என்று அமைச்சர் ஸலிஹா கூறினார். இந்நிலையில், சிங்கப்பூரில் வேலை செய்து தமது ஆற்றலைப் பெருக்கிக்கொண்டு பிறகு அந்த அனுபவங்களை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பணிபுரிய திட்டமிடுவதாக சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய தாதி ஒருவர் கூறினார்.

