சோல்: தங்களின் எல்லைப் பகுதியில் வடகொரியா பல ஆளில்லா வானூர்திகளை செயல்படுத்தியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து தென்கொரிய ராணுவம் ஆகாயப் படை விமானங்களை தயார்நிலையில் வைத்தது, வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தியது.
கியோஞ்சீ மாநிலத்தைச் சுற்றியிருக்கும் எல்லைப் பகுதிகளில் வடகொரியாவின் ஆளில்லா வானூர்திகள் அத்துமீறி நுழைந்ததாக தென்கொரிய ராணுவம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. அதைத் தொடர்ந்து சோல் பல ஆகாயப் படை விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் செயல்படுத்தியது.
தென்கொரியாவின் ஓர் ஆகாயப் படை விமானம் காங்வோன் மாநிலத்தில் உள்ள ஹோய்ங்சியோங் பகுதியில் நேற்று காலை விழுந்து நொறுங்கியது. விமானம் வோன்ஜூ நகிரிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் இருந்த இரண்டு விமானிகளும் சரியான நேரத்தில் தங்களின் இருக்கைகளை வெளியேற்றும் பாதுகாப்பு முறையைச் செயல்படுத்திப் பிழைத்துக்கொண்டனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்கொரிய நேரப்படி நேற்று காலை சுமார் 10.25 மணியிலிருந்து அந்நாட்டின் சில பகுதிகளில் வடகொரியாவின் ஆளில்லா வானூர்திகள் பல காணப்பட்டன. முன்னதாக 2014ஆம் ஆண்டில் வடகொரிய ஆளில்லா வானூர்திகள் தென்கொரியாவின் பாஜு, பாய்ங்யோங் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்டன.

