நேப்பிடோ: அண்மையில் 180 ரோஹிங்யா அகதிகளைக் கொண்ட படகு ஒன்று மூழ்கியதாக நம்பப்படுகிறது. அச்சம்பவத்தைத் தொடர்ந்து ரோஹிங்யா அகதிகளைப் பொறுத்தவரை இவ்வாண்டு ஆக மோசமான ஆண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
சென்ற மாத இறுதியில் பங்ளாதேஷிலிருந்து புறப்பட்ட படகு கடலில் காணாமற்போனது. அதிலிருந்த அனைத்து 180 ரோஹிங்யா அகதிகளும் மாண்டதாக அஞ்சப்படுகிறது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் அமைப்பு தெரிவித்தது. இவ்வாண்டு மட்டுமே கிட்டத்தட்ட 200 ரோஹிங்யா அகதிகள் மாண்டிருக்கலாம் அல்லது கடலில் காணாமற்போயிருக்கலாம் என்று அமைப்பு அஞ்சுகிறது.
"காணாமற்போயிருக்கும் 180 பேர் எங்கேயாவது இன்னும் உயிரோடு இருக்கவேண்டும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று அமைப்பின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
பங்ளாதேஷின் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படும் அகதிகள் முகாம்களிலிருந்து தப்பியோட பல ரோஹிங்யா அகதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அப்போது அசம்பாவிதங்கள் நேர்வதாக ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு குறிப்பிட்டது. மியன்மாரிலிந்து வந்த சுமார் ஒரு மில்லியன் ரோஹிங்யா அகதிகள் பங்ளாதேஷில் இருக்கும் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
பெரும்பான்மை பெளத்த மக்களைக் கொண்ட மியன்மாரில் பொதுவாக முஸ்லிம்களாக இருக்கும் ரோஹிங்யா மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதில்லை. மேலும், அவர்கள் உரிமமின்றி தெற்காசியாவிலிருந்து வந்தவர்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றனர்.
இதற்கிடையே, பல வாரங்களாகக் கடலில் சிக்கிய ரோஹிங்யா அகதிகள் சிலர் இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தின் கடற்கரை ஒன்றில் காணப்பட்டனர்.

