நியூயார்க்: அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் என்றும் இல்லாத வகையில் இப்போது பனிப்புயல் வீசுகிறது.
நூற்றாண்டின் பனிப்புயல் என்று அழைக்கப்படும் இப்புயலில் சிக்கிக்கொண்ட ஏராளமானோரை மீட்க நியூயார்க்கில் அவசர குழுக்கள் களமிறங்கியுள்ளன.
இந்தப் பனிப்புயலுக்கு மாண்டோர் எண்ணிக்கை ஐம்பது ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க் மாநிலத்தில் மட்டும் 28 பேர் மாண்டனர்.
அமெரிக்காவில் மோசமடைந்து வரும் பருவநிலை மாற்றங்களால் ஏராளமான விமானச் சேவைகள் தாமதமாகியுள்ளன. பல இடங்களில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளன.
வாகனப் போக்குவரத்துச் சேவைத் தடையால் மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் மாநிலத்தில் பனிப்புயலில் சிக்கிக்கொண்ட வாகனங்களில் இருந்து உடல்களை மீட்டு வருகின்றனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பனிப்புயலால் 15,000க்கு மேற்பட்ட விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை மட்டும் 2,600 விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. "பனிப்புயலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நியூயார்க் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான பஃப்ளோவில் பெரும்பாலான சாலைகளைப் பனி மூடியதால் அங்குள்ள குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளுமாறு அந்நகர உயர் அதிகாரிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

