ரஷ்ய விமானப் படைத் தளம் மீது தாக்குதல்; மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர்
கிவ்: ரஷ்ய ராணுவத்தால் ஓரளவுக்குத்தான் போராட முடியும் என்றும் அதை எதிர்த்து தொடர்ச்சியான தாக்குதல் தொடுக்கப்பட்டால் அதை எதிர்த்துப் போராட அந்நாடு திணறும் என்றும் உக்ரேன் மதிப்பிட்டுள்ளது. அதனால்தான் ரஷ்யாவின் எல்லைக்குள் உக்ரேன் துணிச்சலுடன் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது என்று முன்னாள் ராணுவ அதிகாரிகளும் ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.
உக்ரேன் ராணுவம், நெடுந்தொலைவு செல்லும் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யாவின் முக்கியப் பகுதியின் வோல்கா ஆற்றோரம் அமைந்துள்ள விமானத் தளத்தின் ஓடுபாதையில் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து இதுவரையிலும் உக்ரேன் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.
இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இன்னொரு சம்பவத்தில் ரஷ்யாவின் சரோட்டோவ் நகரின் அருகேயுள்ள விமானத் தளத்தை நோக்கிப் பறந்து வந்த ஆளில்லா விமானம் ஒன்று ரஷ்ய ஆகாயப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் ரஷ்யா தனது போர் விமானங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால், உக்ரேனின் எரிவாயு நிலையங்களைத் தாக்கி அழிக்கும் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் ரஷ்யா சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. அத்துடன் ரஷ்யா, தனது விமானத் தளங்களில் ஏவுகணைகளை நிலைநிறுத்தி உக்ரேன் மீது தாக்குதலைத் தொடர முடியாத நிலைக்கு ரஷ்யாவைத் தள்ளியுள்ளது இந்தத் தாக்குதல்.
இருப்பினும் அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ரஷ்யா தீவிரம் காட்டவில்லை என்றும் உக்ரேன் மீது ரஷ்யாவால் இதற்குமேல் பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்ள முடியாது என்றும் உக்ரேனிய மக்களும் அதிகாரிகளும் நம்புவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரேனின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஆண்ட்ரி ஸகோரோட்னுக், அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸிக்கு அறிவுரை கூறியுள்ளார். அதாவது, யாராவது உன்னைத் தாக்கினால், திருப்பித் தாக்குதல் நடத்து என்பதுதான் அந்த அறிவுரை.
அதற்கேற்ப, உக்ரேன் முதன்முதலாக ரஷ்யாவின் இராணுவத் தளங்கள், விமானப் படைத் தளங்கள், மத்திய ரஷ்யா ஆகியவற்றை இலக்காகக் கொண்டு நெடுந்தொலைவு ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தாக்குதலை உக்ரேன்தான் மேற்கொண்டதா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது என்று திரு ஆண்ட்ரி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்னொரு முன்னாள் ராணுவ உயர் அதிகாரி செர்ஹிய் ஹிராப்ஸ்கி, ரஷ்யாவின் முக்கிய விமானப்படைத் தளங்கள், எரிசக்தி வளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவத் தளங்கள் ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு உக்ரேன் ராணுவத்தால் தாக்குதல் மேற்கொள்ள முடியும் என்று செய்தியாளர்களிடம் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

