டாக்கா: உலகில் அளவுக்கதிகமாக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் ஒன்றான பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் முதன்முறையாக உள்ளூர் பெருவிரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் இந்நகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் கையாள புதிய ரயில் சேவை கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
20 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த ரயில் பாதையின் ஓர் அங்கத்தை பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். 'லைன் 6' என்றழைக்கப்படும் இந்த ரயில் பாதை இப்போதைக்கு டாக்காவின் வடக்குப் பகுதியையும் அரசாங்க அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகியவை இருக்கும் மத்தியப் பகுதியையும் இணைக்கும். வருங்காலத்தில் நகரின் தெற்குப் பகுதியில் இருக்கும் நிதி மையமான மோட்டிஜீல் பகுதிக்கும் ரயில் பாதை செல்லும்.
இந்த ரயில் பாதைக்கு ஜப்பான் நிதியுதவி அளிக்கிறது. டாக்காவில் மேலும் இரண்டு ரயில் பாதைகளுக்கும் ஜப்பான் நிதி வழங்குகிறது. மூன்று ரயில் பாதைகளும் அமைக்கப்பட்ட பிறகு தினந்தோறும் அவற்றின்வழி சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பயணம் செய்வர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பங்ளாதேஷில் ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுதோறும் அந்நாட்டின் பொருளியலுக்குப் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் தலைநகர் டாக்காவில் சராசரியாக ஒரு வாகனம் மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்கிறது. 305 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட டாக்காவில் 10.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

