ஜோகூர் பாரு: மலேசியாவில் இயந்திரமனிதர்களை வாடகைக்கு எடுக்கும் திட்டம் பிரபல
மடைந்து வருகிறது.
சிறிய, எளிய பணிகளைச் செய்ய இந்த இயந்திரமனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, செலவுகளைக் குறைக்க ஊழியர்களை வேலையில் அமர்த்துவதற்குப் பதிலாக இந்த இயந்திரமனிதர்களைப் பல மலேசிய வர்த்தகங்கள் வாடகைக்கு எடுக்கின்றன.
தலைநகர் கோலாலம்பூர், ஜார்ஜ்டவுன், ஜோகூர் பாரு போன்ற இடங்களில் இந்த இயந்திரமனிதர்களுக்கான தேவை அதிகம் இருப்பதாக இயந்திர
வியல் நிறுவனம் ஒன்றின் வர்த்தக மேம்பாட்டு மேலாளர் திரு ஜெரமி இங் தெரிவித்தார்.
இந்த இயந்திரமனிதர்களுக்கு கோலாலம்பூரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
மலேசியாவில் உள்ள மற்ற இடங்களைக் காட்டிலும் கோலாலம்பூரில் ஊழியர்களின் சம்பளம் அதிகம் என்று கூறிய திரு இங், இதனால் செலவைக் குறைக்க நிறுவனங்கள் இயந்திரமனிதர்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இயந்திரமனிதர்களைப் பயன்படுத்துவதால் அதிக அளவிலான ஊழியர்கள் தேவை இல்லை என்றார் அவர்.
இந்த இயந்திரமனிதர்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் அவற்றைத் தற்போது வாடகைக்கு விடுகின்றன. எனவே, இயந்திரமனிதர்களைப் பயன்
படுத்த விரும்புவோர் அவற்றை வாங்க தேவையில்லை.
பல வர்த்தகங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இயந்திரமனிதர்களை வாடகைக்கு எடுக்கும் திட்டம் கடந்த ஆண்டு துவக்கத்திலிருந்து நடைமுறைப் படுத்தப்பட்டதாகத் திரு இங் தெரிவித்தார்.
ஓர் இயந்திரமனிதனை வாங்க குறைந்தது 35,000 ரிங்கிட் (S$10,700) செலவாகும். ஆனால் மாதந்தோறும் 1,500 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட் வரை செலுத்தி இயந்திரமனிதனை வாடகைக்கு எடுக்கலாம்.
எத்தனை நாள்களுக்கு வாடகை எடுப்பது என்பது குறித்து வாடிக்கையாளர்கள் முடிவுசெய்யலாம் என்றும் முதலில் வாடகைக்கு எடுத்து பிறகு பிடித்திருந்தால் இயந்திரமனிதனை வாங்கலாம் என்றும் திரு இங் கூறினார். உணவகத்தின் சமையலறையிலிருந்து வாடிக்கை யாளர்களின் மேசைகளுக்கு உணவைக் கொண்டு செல்வது, ஒரே நேரத்தில் பல தட்டுகளைத் தூக்குவது, கட்டடங்களில் உள்ள பல்வேறு இடங்களைச் சென்றடைய வாடிக்கையாளர்களுக்குத் திசை காட்டுவது, தகவல் அளிப்பது போன்ற பணிகளை இந்த இயந்திரமனிதர்களால் செய்ய முடியும் என்றார் திரு இங்.

