கியவ்: புத்தாண்டுக்கு முதல் நாளன்று உக்ரேனியப் படைகள் நடத்திய தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் மாண்டனர்,
இத்தாக்குதலில் குறைந்தது 63 ரஷ்ய ராணுவ வீரர்கள் மடிந்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியின் மகிவ்கா நகரில் இருந்த ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து உக்ரேனியப் படைகள் ஏவு
கணைத் தாக்குதல் நடத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அந்த ஆயுதக் கிடங்கிற்கு அருகில் தற்காலிக முகாம் ஒன்றை அமைத்து அதில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கவைக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
ஆயுதக் கிடங்கைக் கிட்டத்தட்ட நான்கு ஏவுகணைகள் தாக்கியதாகவும் அருகில் இருந்த முகாமும் அழிந்து அதில் இருந்த ராணவ வீரர்கள் மாண்டதாகவும் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த வலைப்பதிவாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்கள் மாண்டதாக உக்ரேன் கூறியது.
ஆனால் இதை ரஷ்யா
மறுத்துள்ளது.
இதற்கிடையே, அந்தத் தாக்குதல் நிகழ்வதற்கு முன்பே அதுதொடர்பாக தகவல்கள் கிடைத்ததாகவும் சம்பந்தப்பட்ட ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ரஷ்ய தேசியவாதிகளும் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தெரிவித்தனர்.
இருப்பினும், முகாமில் இருந்த ராணுவ வீரர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கொந்தளித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ராணுவத் தளபதிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
கடந்த மாத இறுதியில் உக்ரேன் தலைநகர் கியவ்வையும் மற்ற நகரங்களையும் குறிவைத்து இரவு நேரங்களில் தொடர்ந்து பல ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது.
இதற்குப் பதிலடி தரும் வகையில் புத்தாண்டுக்கு முதல் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல் அமைந்தது.
இந்நிலையில், உக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ருமேனியாவின் கிழக்குப் பகுதியில், ரஷ்ய எல்லைக்கு மிக அருகில் அமெரிக்கப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ருமேனியாவின் வடக்குப் பகுதியில் உக்ரேனிய எல்லைக்கு அருகிலும் ருமேனியப் படைகளுடன் இணைந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

