கொலம்பியா விமான நிலையத்தில் இரண்டு ஆடவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவியன்கா (Avianca) நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் பழுதுபார்ப்புப் பணி மேற்கொண்டபோது, சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிலியிலிருந்து கொலம்பிய தலைநகர் பொகோட்டாவை வந்தடைந்த விமானத்தில் சடலங்கள் இருந்தன.
மாண்டவர்கள் 15 வயதுக்கும் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களிடம் டொமினிக்கன் குடியரசின் நாணயம் இருந்ததால், அவர்கள் அந்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
விமானம் டோமினிக்கன் குடியரசுக்கு ஜனவரி 3 ஆம் தேதி அன்று பயணம் செய்திருந்தது. அச்சமயத்தில் ஆடவர்கள் விமானத்திற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
சடலங்கள் உறைந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஒருவருக்கு தீப்புண் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

