புத்ராஜெயா: தைப்பூசத் திருநாள், சீனப் புத்தாண்டு ஆகியவை நெருங்கிவரும் வேளையில், மலேசியாவில் கொவிட்-19 அச்சம் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விழாக்காலத்தின்போது மலேசியாவில் கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரிப்பு இராது என்று அது மிகுந்த நம்பிக்கை யுடன் கூறியது. இவ்வாண்டின் தைப்பூசத் திருவிழா, சீனப் புத்தாண்டு ஆகிய விழாக்கள் எப்போதும்போல கொண்டாடப்படும் என்றும் வழக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் இம்முறை நடப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மலேசியாவில் நோன்புப் பெருநாள் உட்பட பல விழாக்கள் கொண்டாடப்பட்டதாகவும் அவற்றின் காரணமாக கொவிட்-19 பாதிப்பு மோசமடையவில்லை என்றும் மலேசிய சுகாதார அமைச்சு கூறியது.
எனவே, கடந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட அதே உத்திகள் இவ்வாண்டும் கையாளப்படும் என்று அது தெரிவித்தது.
மலேசியாவில் அன்றாட கொவிட்-19 பாதிப்பும் அந்நோயால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கிருமிப் பரவலைத் தடுக்க பல உத்திகள் கையாளப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் நூர், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை உன்னிப்பாகக் கண்காணிப்பதும் புதிய, உருமாறிய கிருமிவகைகள் உருவெடுத்திருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்க கழிவுநீர் சோதனையிடப்படுவதும் அவற்றில் அடங்கும் எனத் தெரிவித்தார்.
கொவிட்-19 பாதிப்பு மோசம் அடையக்கூடும் என்பதை உணர்த்தக்கூடிய குறிப்பிட்ட சில அறிகுறிகள் தென்பட்டால் கடுமையான கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
மலேசியாவுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளிடையே கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரிப்பு, ஓமிக்ரானைத் தவிர்த்து புதிய, உருமாறிய கிருமிவகைகள் தலைதூக்குவது, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று டாக்டர் நூர் கூறினார்.

