சிங்கப்பூர்: ஆசிய நாடு ஒன்றின் அரசாங்கத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு குழு தென்கிழக்காசிய, ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் உயரிய அரசாங்க, ராணுவத் தளங்களை ஊடுருவியுள்ளதாக குரூப்-ஐபி எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
'டார்க் பிங்க்' என்று அடையாளம் காணப்பட்டுள்ள புதிய ஊடுருவல் குழு, ஒருவரைத் தனிப்பட்ட தகவல்களை வெளியிடத் தூண்டும் மின்னஞ்சல்கள், உயரிய தீங்குநிரல்கள் போன்றவற்றைக் கொண்டு பிலிப்பீன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் ராணுவத் தளங்களை ஊடுருவியிருக்கிறது. அதோடு, கம்போடியா, இந்தோனீசியா, போஸ்னியா-ஹெர்ட்ஸொகொவினா ஆகிய நாடுகளின் அரசாங்க அமைப்புகளையும் குறிவைத்திருக்கிறது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் டிசம்பர் மாதக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றன. வியட்னாமில் உள்ள ஒரு லாப நோக்கில்லா அமைப்பு, சமயம் சார்ந்த அமைப்பு உள்ளிட்டவையும் குறிவைக்கப்பட்டதாக குரூப்-ஐபி குறிப்பிட்டது.
அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டுகோள் விடுத்து சம்பந்தப்பட்ட அரசாங்க, ராணுவ அமைப்புகளுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. ஆகக் கடைசி நிலவரப்படி அவை பதிலளிக்கவில்லை.
"டார்க் பிங்க்கின் செயல் குறிப்பிடத்தக்கது. கட்டமைப்புகளை ஊடுருவி ரகசியங்களைத் திருட அக்குழு முயற்சி செய்தது தெளிவாகத் தெரிவதே அதற்குக் காரணம்," என்றார் குரூப்-ஐபி நிறுவனத்தின் தீங்குநிரல் கவனிப்பாளர் ஆண்ட்ரே பொலொவின்கின் கூறினார்.
தென்கிழக்காசியாவில் பல அரசாங்க, ராணுவத் தளங்கள் ஊடுருவப்பட்டன

