வாஷிங்டன்: அமெரிக்காவும் ஜப்பானும் நிலம், கடல் வழி மட்டுமன்றி விண்வெளியிலும் தற்காப்பு உறவை வலுப்படுத்தும் திட்டங்களை ஆராய்ந்து வருகின்றன.
ரஷ்யாவுடன் கைகோத்துள்ள சீனாவைச் சமாளிக்கும் விதமாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
வாஷிங்டனில் அமெரிக்க, ஜப்பானிய அதிகாரிகள் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர்.
அதன்பிறகு பேசிய இரு நாடுகளின் அதிகாரிகள், விண்வெளி தற்காப்பு உறவை வலுப்படுத்துவதற்கான இணக்கக் குறிப்பு ஒன்றில் இரு தரப்பும் கையெழுத்திடும் என்று கூறினர்.
ராணுவப் பயிற்சிகளை அதிகரிக்கவும் சீனாவின் மிரட்டலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக இவ்வட்டாரத்தில் தங்களுடைய படைகளை ஒழுங்குப்படுத்தவும் இரண்டு நாடுகள் கடப்பாடு தெரிவித்துள்ளன.
இவ்வாரத்தின் பிற்பகுதியில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி இரு நாடுகளின் அதிகாரிகள் பேச்சு நடத்தி உள்ளனர்.
சீனாவின் ஆக்ரோஷமான செயல்கள் குறித்து இரு நாடுகளும் எந்த அளவுக்கு கவலை கொள்கின்றன என்பதை இந்தப் பேச்சு காட்டுகிறது.
"சீனாவின் படைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
"தைவான் மீதான அணுகுமுறையில் புதிய வழக்கத்தை அது நிலைநாட்ட முயற்சி செய்கிறது," என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறினார்.
தைவான் நீரிணையில் சீனாவின் நடமாட்டம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு விரிவடைந்து வருவது குறித்த பொதுவான எண்ணங்களை ஜப்பானிய, அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார்.

