பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் கடையில் உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்ட கேமராவிலிருந்து பதிவு செய்த காட்சிகள் இணையத் தளத்தில் விற்கப்படுவதாக டுவிட்டர் பதிவாளர்கள் சிலர் கவலை தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அக்கடையின் உரிமையாளரான சிலாங்கூர் எச்அண்ட்எம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
"எங்களுடைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியம், இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளோம், விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அந்நிறுவனம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது. கடையில் உள்ள அனைத்து உடை மாற்றும் அறைகளையும் சோதனையிட்டு, பாதுகாப்பு விதிமீறல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
சுவீடனைத் தளமாகக் கொண்டு செயல்படும் எச்அண்ட்எம் நிறுவனம், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பதின்ம வயதினருக்கான நவநாகரிக உடைகளை விற்று வருகிறது.
உடை மாற்றும் அறையில் பதிவு செய்யப்பட்ட தம்பதியர் மற்றும் தனிப்பட்டவர்களின் காணொளிகள் என்று கூறி மலேசியாவில் உள்ள இணையத் தளங்களில் ஒருவர் விற்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து எச்அண்ட்எம் புகார் அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் முறையாக ஒரு பெண் டுவிட்டர் பதிவில் இது பற்றி குறிப்பிட்டு இருந்தார். அந்தப் பதிவை அவர் பின்னர் அழித்துவிட்டார். ஒரு காணொளியில் தாம் இருந்ததாகவும் கடந்த அக்டோபரில் அது பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறை இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருகிறது.

