மலேசிய பொது விருதுப் போட்டி: லோ கியன் இயூ வெளியேறினார்
சிங்கப்பூர்: மலேசிய பொது விருது பூப்பந்துப் போட்டியில் தொடர்ச்சி யாக 4வது முறை தோல்வியைத் தழுவிய சிங்கப்பூரின் லோ கியன் இயூ (படம்) போட்டியிலிருந்து வெளியேறினார்.
தாய்லாந்தின் குன்லாவுட் விட்டிட்சம் என்ற வீரரிடம் நேற்று லோ 21-11, 20-22, 21-14 என 80 நிமிடங்கள் போராடித் தோற்றார். போட்டிக்குப் பின் பேசிய லோ, "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது புத்தாண்டு மோசமாகத் தொடங்க வில்லை. எனது தகுதிக்கு ஏற்றவாறு நான் விளையாடி னேன். நான் இன்னும் நன்றாகச் செய்வேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.
"ஆனால், போட்டி என வந்துவிட்டால் அதில் ஒருவர் தான் வெற்றிபெற முடியும். என்னால் முடிந்த மட்டும் விளையாடினேன். இனி அடுத்த போட்டிக்கு என்னைத் தயார் செய்துகொள்வேன். எனக்குள் நானே வைத்து இருந்த எதிர்பார்ப்புகளையும் தடைகளையும் தாண்டி வந்து உள்ளேன். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் நிறைய முன்னேறவேண்டியுள்ளது. ஆனால், இப்போதைய நிலையில் எனக்குத் தேவை ஓய்வு. அதன்பின், அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்திய பொது விருதுப் போட்டி யில் பங்கேற்பேன்," என்று
லோ கூறினார்.
தோல்வியைத் தொடர்ந்து சோதனை
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் நேற்று அதிகாலை ஃபுல்ஹம் குழுவிடம் தோற்ற செல்சிக்கு அடுக்கடுக்கான சோதனை ஏற்பட்டு வருகிறது. ஆட்டத்தில் ஜோ ஃபிலிக்ஸ் என்ற வீரர் அபாயம் விளைவிக்கும் வகையில் ஆடியதற்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அத்துடன், செல்சிக்கு எதிரான முதல் கோல் அதன் கோல்காப்பாளர் கெப்பா அரிசாபலாகா என்பவரின் தவற்றால் ஏற்பட்டது.
அந்த முதல் கோலைப் போட்டவர் முன்பு செல்சிக்காக விளையாடிய வில்லியன் என்பவர். இது போதாதென்று ஆகக் கடைசியாக அனைத்து போட்டிகளிலும் விளையாடிய 10 ஆட்டங்களில் ஏழில் செல்சி தோல்வியைத் தழுவியுள்ளது. குழுவின் இந்த இக்கட்டான நிலையை பிரிதிபலிக்கும் விதத்தில் குழுவின் நிர்வாகி கிரஹேம் போட்டர் தமது குழுவினரை ஒன்றிணைந்து ஒரே அணியாகச் செயல்படுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
ஃபுல்ஹம் குழுவின் வில்லியன் செல்சிக்கு எதிராக முதல் கோலைப் போட்டபின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் செல்சியின் குலிபாலி தமது அணி சார்பாக ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார்.ஆனால், செல்சியின் ஜோ ஃபிலிக்ஸ் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் ஃபுல்ஹமின் கார்லோஸ் வினிஷியஸ் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு கோல் போட்டு செல்சி நிர்வாகியான போட்டருக்கு தீராத தலைவலியைக் கொடுத்துள்ளார். தற்போதைய நிலையில், செல்சி நிர்வாகி போட்டர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
பயணம் கிளப்பிய பரபரப்பு
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் ராகுல் டிராவிட் உடல்நலப் பிரச்சினை காரண மாக நேற்று திடீரென்று தனியாக பெங்களூரு கிளம்பிச் சென்றார். இது சமூக ஊடகங்களில் பலவிதமாகப் பரபரப்பானது. இலங்கையுடன் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது தமக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பதாக ராகுல் கூறியிருந்தார். இதற்கிடையே, டிராவிட்டின் உடல்நலம் குறிப்பிடும்படி பாதிக்கப்படவில்லை என்றும் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஆட்டத்திற்கான பயிற்சியை அளிக்க அவர் இன்று வந்துவிடுவார் என்றும் சில தகவல்கள் கூறின. டிராவிட் இரு நாள்களுக்கு முன்னர் தமது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
கர்ப்பமுற்றதால் தற்காலிக ஓய்வு
மயாமி: உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமான நவோமி ஒசாகா, 25, (படம்) தாம் கர்ப்பமடைந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டுவரை டென்னிஸ் விளையாடுவதில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறினார். கடந்த செப்டம்பர் முதல் இவர் எந்தவொரு டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

